கதிரவன்
செத்த துக்கம்
ஏதுமின்றி,
நிலவை வரவேற்க,
நட்சத்திரங்கள்
தயாராகி கொண்டிருந்த
மாலை வேளை

என்னவள் வந்தாள்
துடித்தாள்,
என் விரலிலிருந்த
காயத்தைக் கண்டு

விரல்களைப் பற்றி
மென்மையாக
முத்தமிட்டாள்.

ஆசையுடன்
அல்லது
பேராசையுடன்
கன்னத்தை காட்டினேன்.

போடா
எல்லா முத்தத்தையும்
உனக்கே
கொடுத்து விட்டேன்
என்றால்,
முத்தம் எல்லாம்
தீர்ந்து போய்விடும்,
அப்புறம் நாளைக்கு
அஸ்வின்
கோவிச்சுக்குவான்
என்றாள்.

சாதாரணமாகவே
எனக்கு அதிகம்,
இப்போது கொழுந்து விட்டு
எரிந்தது கோபம்..

"அது எவன்டீ அஸ்வின்?",
அவள் தலைமுடியை
கொத்தாக
பற்றினேன்.

அய்யோ
விடுடா, வலிக்குது
என்றவள்,

அட மக்கு மாமா.
நாளைக்கு
நமக்கு
பொறக்க போற
பையனுக்கு தான்
அஸ்வின் னு
பேர் வைக்க போகிறோம்.

சாரி கண்ணம்மா
நான் ஒரு லூசு.
என்றேன்.

அதான் ஊருக்கே
தெரியுமே
என்றாள், நக்கலாக.

என்கிட்டயேவா..?

நீ
முத்தங்களை
சேமித்து வைக்கிறாய்.
ஆனால்
நான் ஊதாரி.
கண்டபடி முத்தத்தை
செலவு பண்றேன்,
என்றேன்.

எனக்காக தானே
செலவு பண்ற.
யாரும் ஒன்னும்
சொல்லமாட்டாங்க.
என்றாள்.

அய்ய
மகாராணிக்கு
அப்படி ஒரு ஆசையா.?
நான்
முத்தமிட்டது
என் தேவதையை.
இன்னிக்கு கூட
ஒரு முத்தம் செலவு

ஆனால்
வயசுதான்
உன்னை விட அதிகம்,
என்றேன்.
இப்போது
நக்கலடிப்பது
என் முறை.

எவடா அவ...
தேவதையாமில்ல...
பிச்சிபுடுவேன் பிச்சி...
லேசான கோபத்தைக் காட்டினாள்.

அவ உன்னை விட
செம அழகு
தெரியுமா...?
நான்
மீண்டும்
வெறுப்பேற்ற,

என் விரலிலிருந்த
காயத்திலேயே
நசுக்கினாள்..

இந்த பெண்கள்...
அவர்களின் நியாயமே
அலாதியானது தான்,

ஆண்கள்
தவறு செய்தால்
தண்டனை
ஆண்களுக்கு..
பெண்கள்
தவறு செய்தால்,
அப்போதும் தண்டனை
ஆண்களுக்குத்தான்.

அவள்
போட்ட முடிச்சை
அவிழ்க்க முயற்சித்தேன்,
அவிழ்க்க முடியவில்லை..
அது சுவாரஸ்யம்தான்.

ஆனால்,
அவிழ்க்கவே
முடியாத முடிச்சை போடுவது
அதைவிட
சுவாரஸ்யமல்லவா....

"காயத்துல
அழுத்தாதே...
நான் சொன்னது
என் அம்மாவை...

ச்சே.‌.
ஸாரிடா...
நானும் அவசரப்பட்டுட்டேன்
என்றவள்,
விரலின் காயத்தை
தடவி முத்தமிட்டாள்...

அவள்
முத்தமிட்டது
என் விரல்களில் மட்டும்தான்
என்று
நீங்களாகவே
நினைத்து கொண்டால்,
அதற்கு
நானா பொறுப்பு.?
-கவிதைக்காரன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top