கண்ணன்
எல்லாமும்
தெரிந்திருப்பது
வரமல்ல.
சாபம்.
சில விஷயங்கள்
புரியமலிருப்பதே
வரம்.
அப்போது
நான் ஏழாம் வகுப்பு
படித்துக் கொண்டிருந்தேன்.
எங்கள் வீட்டில்
ஒரு ஆடு வளர்த்தோம்,
அதன் பெயர்: கண்ணன்.
சில நேரங்களில்
ஆறறிவு பந்தங்களை விட
ஐந்தறிவு சொந்தங்கள்
வலிமையானவை.
இருக்கவே முடியாது
என்னைப் பார்க்காமல்
கண்ணனால்.
அல்லது
கண்ணனை பார்க்காமல்
என்னால்,
நானில்லா
ஏதோ ஒரு தருணத்தில்
கண்ணன்
விற்பனை செய்யப்பட்டான்.
படுகொலை
செய்யப்படுவதற்காகவே
சீராட்டி வளர்க்கப்படும்
ஆடுகள்.
வலுக்கட்டாயமாக
கண்ணனை
இழுத்துச் செல்லப்படும்போது,
மனம் பதறியது.
என்னால்
என்ன செய்ய முடியும்,
அழுவதைத் தவிர?
ஆனால்,
கடைசியாக
கண்ணன் பார்த்த பார்வையை
கடைசி வரை
மறக்க முடியாது.
அந்த பார்வையின் வலி
எனக்குத் தெளிவாக
புரிந்து தொலைத்தது.
ஏன்தான்
சில நேரங்களில்,
சில அர்த்தங்கள்
புரிந்து தொலைக்கிறதோ?
-கவிதைக்காரன்